“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” – எபிரெயர் 12:11
இவ்வசனத்தின் கருத்திற்கு, பள்ளிப் பருவத்தின்போது வேதியியல் பாடத்தில் நாம் பயின்ற ஒரு பரிசோதனையானது அருமையாகப் பொருந்துகின்றது. அந்த வேதியியல் பரிசோதனையின்போது அழகானதும், நீல நிறமுள்ளதும், ஒளி ஊடுருவக்கூடியதுமான காப்பர் சல்பேட் / Copper Sulphate எனும் உப்பு கரைசலானது/Solution கொடுக்கப்பட்டு, அதிலிருந்து படிகங்களை உருவாக்கும்படிக்கு நம்மிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நாமும் அந்தக் கரைசலைக் கொதிக்கவைத்து, ஆவியாக்கல்/Evaporation மூலம், அதன் அளவை பாதியாக்குகின்றோம். கொதிக்கவைத்த பின்னரும், அந்தக் கரைசலில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. பின்னர் அந்தக் கலனை/Container அப்படியே இரவு முழுவதும் வைத்துவிடுகின்றோம். மறுநாள் ஆய்வுக்கூடத்திற்குச் சென்று பார்க்கையில், அங்கு அழகிய படிகங்கள் உருவாகியிருப்பதை நாம் காணலாம். அது எப்படி உருவாகிற்று? கடுமையாய்க் கொதிக்க வைக்கப்பட்ட கரைசல் குளிர்ந்ததும், இரசாயன பொருட்கள் அதன் இயல்பான நிலையை அடைய முயல்கின்றன; இப்படியாக அந்தப் படிகங்கள் உருவாகுகின்றன.
நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தில் வரும் வேதனையான அனுபவங்களும் ஏறக்குறைய இந்தப் படிகங்கள் போலவே காணப்படுகின்றன. வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதை நாம் சுதாரித்துக்கொள்வதற்கு முன்னதாகவே, நாம் ஏதோ சில பிரச்சனைகளுக்குள், ஏதோ சில மன உளைச்சலுக்குள், நம்மால் கட்டுப்படுத்த அல்லது புரிந்துகொள்ள முடியாத ஏதோ சில சூழ்நிலைகளுக்குள் சிக்குண்டவர்களாக, மனக்கொந்தளிப்பிற்கு ஆளாகிவிடுகின்றோம். அச்சூழ்நிலைகள் மத்தியில் நம்முடைய சுயரூபம் வெளிப்பட்டு, நாம் (காப்பர் சல்பேட் / Copper Sulphate எனும் உப்பு கரைசலைப்போல) கொந்தளித்துக் கொதிக்கின்றோம். நம்மிடம் இல்லை என்று நாம் நினைத்திருந்த அல்லது வெகு காலத்திற்கு முன்பே வென்றுவிட்டதாக நாம் நினைத்திருந்த நம்முடைய பெருமை அல்லது வேறு ஏதேனும் ஒரு பண்பு மேற்பரப்பிற்கு வந்து கொதிக்கின்றது; மேலும் கொதித்துக்கொண்டே இருக்கின்றது; ஒருவேளை இது பல மணிநேரங்கள் அல்லது நாட்கள்கூட நீடிக்கலாம்; நாம் நம்முடைய இம்மாதிரியான சுபாவங்களை நாட்கணக்காக அல்லது வருடக்கணக்காக, அதாவது எத்தனை காலங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதற்குத் தேவன் அனுமதிப்பார் என்பது அவருடைய விருப்பத்தைப் பொறுத்து இருக்கின்றது. இறுதியில் (நாம் விரக்தியின் விளிம்பிற்கு வந்து) பிதாவின் விருப்பத்திற்கு மாறாக நடந்துவிட்டோம் என்பதை உணர்ந்துகொள்கின்றோம்; நாம் தலை குனிகின்றோம் மற்றும் நாணமடைகின்றோம். பிற்பாடு நாம் உடனடியாக சில வேத தியானங்களை மேற்கொள்வதினாலோ, சக விசுவாசிகளோடு ஐக்கியம்கொள்வதினாலோ, நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தில் நாம் ஏறெடுக்கும் முயற்சிகளினாலோ நல்ல பலன்கள் எதுவும் உடனடியாக வராது. நாம் சிட்சிக்கப்படுவதை உணர்ந்துகொள்கின்றோம். காலங்கள் செல்லச் செல்ல, அந்த அனுபவங்கள், நினைவுகளாக நம் மனங்களில் பதியப் பெறுகின்றன. பின்னர் முன்பு வந்த அனுபவம் போன்றதொரு அனுபவம்/ சூழ்நிலை மீண்டும் வருகின்றது. ஆனால் இம்முறை நாம் அச்சூழ்நிலையினை வேறுவிதமாக அணுகுவோம். முன்பு நம்மை கோபப்படுத்திய அல்லது தடம்புரளச் செய்தவைகள் இனிமேலும் நம்மை பாதிப்பதில்லை. இப்பொழுது நாம் உறுதியுடன் காணப்படுவதைக் காண்போம். ஏன் இவ்வாறு? ஏனெனில் நம்முடைய குணலட்சணம் அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் உறுதியடைந்து பக்குவப்பட்டுள்ளது. எபிரெயர் 12:11-ஆம் வசனத்தில் இடம்பெறும் “ஆகிலும் பிற்காலத்தில்” என்ற பாகம்தான் நம்மிடம் வேலைசெய்துள்ளது. அனுபவத்தின் ஒரு பாகமாகக் காணப்படும் “சிட்சை” எனும் அம்சமானது கண்ணுக்குப் புலப்படும்/வெளியரங்கமான அம்சமாகவும், மிக முக்கியமான அம்சமாகவும் காணப்படுகின்றது. ஏனெனில் புற/உணர்வு மனமானது (Conscious mind) வாழ்க்கையின் அனுபவங்களினால் சரியாகப் பயிற்றுவிக்கப்படும்போது தான், ஆழ்மனமானது (Subconscious mind) நீதியின் சமாதான கனிகளைக் கொணரும் அதன் அமைதியான மற்றும் யாருக்கும் புலப்படாத பணியினை செய்ய முடியும்; இது அனுபவத்தினுடைய கண்ணுக்குப் புலப்படாத ஓர் அம்சமாகும். கண்களுக்குப் புலப்படாத ஆழத்திலிருந்து நீதியின் சமாதான கனிகள் பின்னர் வெளிப்படுகின்றது. தோல்விதான் மெய்யான வெற்றிக்கான ஒரே பாதையாகக் காணப்படுகின்றது என்பது மற்றுமொரு தெய்வீகப் புதிர்/இரகசியம் ஆகும். இறுதி வெற்றியைப்பெற வேண்டுமானால், அனுபவத்தினுடைய தோல்வி எனும் பாகம் அவசியமாயிருக்கின்றது. 2 கொரி. 12:9 “அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.”
– The Herald Magazine 1991,1939,1978